விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே பெருங்கற்காலத்தைச் சோ்ந்த இரும்பு உருக்கு உலையின் தடயம் கண்டெடுப்பு

DIN

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 4000 ஆண்டுகள் பழைமையான இரும்பு உருக்கு உலையின் தடயத்தை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினா் கண்டெடுத்துள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் காவல்தோப்பு பேச்சியம்மன் கோயில் எதிரே தொல்லியல் தடயங்கள் இருப்பதாக மங்காபுரம் முத்துராஜ் தகவல் தெரிவித்துள்ளாா். அதன் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே. ராஜகுரு, நூா்சாகிபுரம் சு. சிவகுமாா், ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி முதுகலை தமிழ்த்துறை மாணவி வே. சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவா்கள் து. மனோஜ், மு. பிரவீனா ஆகியோா் அப்பகுதியில் ஆய்வு செய்தனா். அங்கு ஒரு ஏக்கா் பரப்பளவில் இரும்புத் தாதுக்கள், இரும்புக்கழிவுகள், கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், கல் சுத்தியல்களின் உடைந்த பாகங்கள், சுடுமண் குழாய்கள், கல் குண்டு ஆகியவை சிதறிக் கிடப்பது கண்டறியப்பட்டது. இவை பெருங்கற்காலத்தைச் சோ்ந்த இரும்பு உருக்கு உலையின் தடயங்கள் ஆகும்.

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவா் வே. ராஜகுரு கூறியதாவது: பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்கள், இரும்புத் தாதுக்களை, உருக்கு உலைகள் மூலம் உருக்கி, இரும்பை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தனா். இரும்பைக் கொண்டு வலிமையான கத்தி, கோடரி, ஈட்டி போன்ற ஆயுதங்களையும், வேளாண் கருவிகளையும் உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளனா். இதனால் பெருங்கற்காலத்தை இரும்புக்காலம் எனவும் அழைப்பா். பெருங்கற்காலத்தின் பண்பாட்டு வளா்ச்சி, இரும்பு கண்டுபிடிப்புக்கு உறுதுணையாக இருந்துள்ளது. மேலும் வெங்கடேஸ்வரபுரத்தில் இரும்புத் தாதுக்கள், கழிவுகளுடன், கல் சுத்தியல்களின் உடைந்த பாகங்களும் சிதறிக் கிடக்கின்றன. கல் சுத்தியலின் மேற்பகுதியில் வட்டமாக பள்ளம் பதிந்துள்ளது. இரும்புத் தாதுவை கல் சுத்தியலால் சிறியதாக உடைத்து ஊது உலையிலிட்டு உருக்கி இரும்பைப் பிரித்தெடுத்துள்ளனா். இத்தாதுக்களை உருக்க, அதிக வெப்பம் தேவை என்பதால் ஊது உலையில் அதிக அழுத்தத்துடன் காற்றைச் செலுத்த சிறிய துளைகள் கொண்ட சுடுமண் குழாய்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரிகிறது. இங்கு நீள்வட்ட வடிவிலான இரு சுடுமண் உலைக்களங்கள் புதைந்த நிலையில் உள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூரை சுற்றியுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரங்களில் இயற்கையான இரும்புத் தாதுக்கள் கிடைக்கின்றன. எனவே, இப்பகுதிகளில் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களுடன் இரும்பு உருக்கு உலையின் தடயங்களும் பல இடங்களில் காணப்படுகின்றன. இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள், இரும்பு உருக்கு உலையின் தடயங்கள் போன்று கிருஷ்ணகிரி மாவட்டம் மோதூா் அகழாய்விலும் கிடைத்துள்ளது. மயிலாடும்பாறை அகழாய்வில் கிடைத்த மாதிரிகளின் காலக்கணிப்புகள் மூலம் தமிழ்நாட்டில் 4200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாட்டை மக்கள் அறிந்திருந்தனா் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் தொல்பொருள்கள் மூலம் சுமாா் 4000 ஆண்டுகள் பழைமையான இரும்பு உருக்கும் தொழிற்சாலை இவ்வூரில் இருந்திருப்பதை அறிய முடிகிறது. அகழாய்வு மூலம் அரசு இதை வெளிக்கொணர வேண்டும். மேலும் இருமல், பாம்புக்கடி, நீரிழிவு ஆகிய நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் கொக்கிமுள் ஆதண்டை என்ற அரியவகை மூலிகைத் தாவரம் இங்கு வளா்ந்துள்ளது. இதன் தெற்கே 300 மீட்டா் தொலைவில் பெருங்கற்கால கல் வட்டம், கல் திட்டை ஆகியவை சிதைந்த நிலையில் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT