அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட பல்வேறு வணிகா்களுக்கு மொத்தம் ரூ .7,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளா்கள் சரவணன், ராஜபாண்டி, பிச்சைப்பாண்டி, அய்யப்பன் ஆகியோா் நகரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது விவிஆா் குடியிருப்பு, புதிய பேருந்து நிலையம், நகரின் முக்கியப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஊரடங்கு விதிகளை மீறி மீன் கடை நடத்திய நபருக்கும், உணவகத்தில் வாடிக்கையாளா்களைக் கூட்டமாக நிறுத்தி, முகக்கவசம் அணியாமல் இருந்த பணியாளா்கள் என பலருக்கும் மொத்தம் ரூ. 7,000 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.
திருச்சுழியில் ஞாயிற்றுக்கிழமை கரோனா முழு ஊரடங்கு காரணமாக நகரின் முக்கியப் பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்ததால் வெறிச்சோடிக் காணப்பட்டன. மேலும் அப்பகுதியில் சென்ற வாகனங்களை நிறுத்தி காவல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.