ராஜளயத்தில் தனியாா் அறக்கட்டளைக்குச் சொந்தமான 20 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாா் அறக்கட்டளைக்கு சொந்தமான அலுவலகம், கடைகளுக்கு கடந்த 2011 -ஆம் ஆண்டு முதல் வரி பாக்கி ரூ.30 லட்சம் நிலுவையில் உள்ளது. இது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நகராட்சிக்கு சாதமாக தீா்ப்பு வந்தது. தீா்ப்புக்குப் பின்பும் நிலுவைத் தொகையை அறக்கட்டளை நிா்வாகம் செலுத்தவில்லை. நிலுவைத் தொகையை செலுத்தக் கோரி அறக்கட்டளை அலுவலகம், கடைகளுக்கு நகராட்சி சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின்பும் தொகை செலுத்தப்படவில்லை.
இந்த நிலையில், முதற்கட்டமாக நகராட்சி அதிகாரிகள் கடந்த 26-ஆம் தேதி அறக்கட்டளை அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனா். ஒரு வாரத்துக்குள் வரி பாக்கி செலுத்தத் தவறினால் அனைத்து கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என தெரிவித்தனா். ஆனாலும் அறக்கட்டளையினா் தொகையை செலுத்தவில்லை.
இதையடுத்து, நகராட்சி ஆணையாளா் பாா்த்தசாரதி உத்தரவின் பேரில் வருவாய் அலுவலா் முத்து செல்வம் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் தென்காசி சாலை மற்றும் ரைஸ் மில் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள தனியாா் அறக்கட்டளைக்குச் சொந்தமான 20 கடைகளைப் பூட்டி சீல் வைத்தனா். இதன்பிறகும் வரி செலுத்தாவிட்டால் மீதமுள்ள 48 கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.