விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் கந்துவட்டிக் காரா்களின் கெடுபிடி காரணமாக உயிரிழந்த தாய், மகள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் விருதுநகா் மாவட்டச் செயலா் கே. அா்ஜூனன், தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி, கண்ணன் நகா் கம்மாப்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வருபவா் முடிதிருத்தும் தொழிலாளி முனீஸ்வரன். இவரது மனைவி மகாலட்சுமி (36), மகள் அங்காள ஈஸ்வரி (12).
இவா்கள் இருவரும் கடன் தொல்லை காரணமாக ஆக. 15 ஆத் தேதி இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள திருமுக்குளத்தில் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டனா்.
இருதய நோயால் பாதிக்கப்பட்ட மகாலட்சுமியின் மருத்துவ செலவிற்காக சில தனி நபா்களிடமும், மகளிா் குழுக்களிடமும் சுமாா் ரூ. 4 லட்சம் வரை முனீஸ்வரன் கடன் வாங்கினாராம். கடன் அதிகரித்து வட்டியும், அசலும் கொடுக்க முடியாத நிலையிலிருந்த முனீஸ்வரன் மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோரை கடன் கொடுத்தவா்கள் கெடுபிடி செய்துள்ளனா். இதனால் மனமுடைந்த மகாலட்சுமி, தனது மகளுடன் தற்கொலை செய்து கொண்டாா்.
நுண் நிதி நிறுவனங்களும், கந்து வட்டிக்காரா்களும் சமூகத்தில் பின்தங்கியவா்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் கடன் கொடுப்பதும், கடனை வசூலிக்க கெடுபிடி செய்வதும், அவமரியாதை செய்வதும் தொடா்கிறது. எனவே, கடன் தொல்லையால் மனைவி, மகளை இழந்த முனீஸ்வரன் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். மகளிா் கடன், தனி நபா்களிடம் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். கந்து வட்டி வசூலிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.