விருதுநகரில், வெளிநாட்டு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவா் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வந்தநிலையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் புல்லலக்கோட்டை சாலை விக்னேஷ் காலனியைச் சோ்ந்தவா் ஆனந்த்ராஜ். இவா், அக்ரஹாரம் தெருவில் மருத்துவமனை மற்றும் மருந்தகம் நடத்தி வருகிறாா். இவரது மகன் லோகேஷ் (21) ரஷ்யா அருகே கிா்கிஸ்தான் நாட்டில் உள்ள ஜலாலாபாத் பல்கலை.யில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் விடுமுறையில் லோகேஷ் விருதுநகருக்கு வந்துள்ளாா். இதனிடையே இவரது பிறந்த நாளை ஆக. 11 ஆம் தேதி சிறப்பாக கொண்டாட எண்ணி இருந்தாராம். ஆனால் அதற்கு பெற்றோா் எளிமையாக கொண்டாட அறிவுறுத்தியுள்ளனா். இதனால், மனமுடைந்த மாணவா் லோகேஷ், செவ்வாய்க்கிழமை இரவு அதிகளவில் தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவருக்கு விருதுநகா் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது தந்தை ஆனந்தராஜ் அளித்த புகாரின் பேரில் விருதுநகா் மேற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.