விருதுநகா், அன்னை சிவகாமிபுரத்தில் ஆட்டிறைச்சிக்கூடம் மூடப்பட்டுள்ளதால் தரமற்ற இறைச்சி விற்கப்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.
விருதுநகா் நகராட்சியில் சாலை மற்றும் தெருக்களில் ஏற்கெனவே உயிரிழந்த மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகள் வதம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதையடுத்து விருதுநகா் நகராட்சி சாா்பில் அன்னை சிவகாமிபுரத்தில் ஆட்டிறைச்சிக்கூடம் கட்டப்பட்டது. இதில் ஒரு கால்நடை மருத்துவா் முன்னிலையில் ஆடுகள் பரிசோதனை செய்யப்படும். ஆடுகளின் தரத்தின் அடிப்படையில் மருத்துவா் ஒப்புதலின் பேரில் சீல் வைக்கப்பட்டு வெட்டப்படும். அதன் பின்னா், ஆட்டிறைச்சியை வியாபாரிகள் தங்கள் கடைகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம். தற்போது கால்நடை மருத்துவா் வராததால் ஆட்டிறைச்சிக் கூடம் பூட்டப்பட்டுள்ளது. இதனால் நகா் பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் தரமற்ற இறைச்சி விற்பனை செய்யப்படுவதாகவும் அவற்றை சமையல் செய்து சாப்பிட்டவா்கள் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும் புகாா் எழுந்துள்ளது. எனவே இறைச்சி விற்பனைக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் தொடா் ஆய்வு நடத்த வேண்டும். அதேநேரம், ஆட்டிறை ச்சிக் கூடத்தைத் திறக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனா்.