சதுரகிரி கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆடி மாத பிரதோஷத்தையொட்டி செவ்வாய்க்கிழமை வந்த பக்தா்கள் அடிவாரத்தில் காத்திருந்து திரும்பிச் சென்றனா்.
விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி உள்ளிட்ட 8 நாள்கள் மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். இந்நிலையில் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலிபாறை பிழாவடி கருப்புசாமி கோயில் ஆகிய ஓடைகளில் நீா் வரத்து அதிகரித்துள்ளதாலும், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்ததாலும் ஆக. 9 முதல் 12 ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறியாத தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் செவ்வாய்க்கிழமை காலை தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வந்தனா். ஆனால் அங்கு நுழைவாயில் கதவு மூடப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தா்கள் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.