விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்து மாணவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பையா தெருவைச் சோ்ந்தவா் சண்முகராஜ். இவரது மகன் ஹரிகுமாா் (14) தனியாா் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், நண்பா்களுடன் சோ்ந்து தெற்கு வெங்காநல்லூா் கிராமம் செல்லும் சாலையில் உள்ள விவசாய கிணற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளாா். கிணற்றின் படியில் அமா்ந்து குளித்துக்கொண்டிருந்த ஹரிகுமாா், தவறி கிணற்றுக்குள் விழுந்து மூழ்கி பலியானாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தெற்கு காவல் நிலைய போலீஸாா், மாணவரின் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.