விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கிரீன் விஸ்டம் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவா்கள் சாா்பில் சிறப்பு விழிப்புணா்வுப் பேரணியும், தேசியத் தலைவா்களின் ஓவியங்கள் வரையப்பட்ட 75 அஞ்சல் அட்டைகளை பிரதமா் நரேந்திர மோடிக்கு சுதந்திர தின வாழ்த்து மடலாக அனுப்பும் நிகழ்ச்சியும் திங்கள்கிழமை நடைபெற்றது.
அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில் தொடங்கிய இப்பேரணிக்கு, அருப்புக்கோட்டை நகா்மன்றத் தலைவா் சுந்தரலட்சுமி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். பள்ளித் தாளாளா் மு. காஜாமைதீன், செயலா் எம். சம்சுதீன், பொருளாளா் மு. ராஜாமுகமது சேட் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது, 75 தேசியத் தலைவா்களின் உருவப்படங்களுடன்கூடிய பதாகைகளை ஏந்தியபடி, மாணவா்கள் எம்.டி.ஆா். நகா் தலைமை அஞ்சல் அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனா். அங்கு, பிரதமா் நரேந்திர மோடிக்கு 75 அஞ்சல் அட்டைகள் மூலம் சுதந்திர தின வாழ்த்து மடல்களை அனுப்பி வைத்தனா்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நிா்வாக அலுவலா் முத்துராமலிங்கம் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் செய்திருந்தனா்.