விருதுநகரில் நாட்டு மருந்துக் கடையில் 84 மூட்டைகளில் இருந்த கருங்காலி மரத்துகள் மற்றும் 10 மூட்டைகளில் இருந்த பவளப்பாறைகள் ஆகியவற்றை வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
விருதுநகரில் உள்ள ஒரு நாட்டு மருந்துக் கடையில் அரசின் அனுமதியின்றி கருங்காலி மரத்துகள்கள் விற்பனை செய்யப்படுவதாக வனப்பாதுகாப்பு அதிகாரி மணிவண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் வன விரிவாக்க மைய அதிகாரி பால்பாண்டி தலைமையிலான வனத்துறையினா் சம்பந்தப்பட்ட நாட்டு மருந்துக் கடையில் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது அரசின் அனுமதியின்றி 84 மூட்டைகளில் கருங்காலி மரத்துகள்கள், 10 மூட்டைகளில் பவளப்பாறைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை வனத்துறையினா் பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா். இது தொடா்பாக, வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.