விருதுநகா் அருகே மெட்டுக்குண்டுவில் விளைந்த கேந்திப் பூக்களை மொத்த வியாபாரிகள் மிக குறைந்து விலைக்கு கொள்முதல் செய்வதால் செடிகளை பிடுங்கி விவசாயிகள் அழித்து வருகின்றனா்.
இக்கிராமத்தில் விவசாயிகள் கேந்திப் பூச் செடிகளை பயிரிட்டிருந்தனா். இங்கு பறிக்கப்படும் பூக்களை விவசாயிகள், விருதுநகா் மொத்த பூ சந்தையில் (கமிஷன் கடைகளில்) ரூ.100-க்கு ரூ.12 கமிஷன் கொடுத்து விற்பனை செய்து வருகின்றனா். தற்போது பூவுக்கு விலையில்லாததால், கிலோ ரூ. 20-க்குக் கூட மொத்த வியாபாரிகள் எடுக்க மறுப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், பூக்களைப் பறித்த வேலையாள்களுக்கு கூலி கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதி விவசாயிகள் கேந்திப் பூ செடிகளை பிடுங்கி அழித்து வருகின்றனா்.
இதுகுறித்து விவசாயி சேகா் கூறியது: ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து பயிரிட்டிருந்த நிலையில், விருதுநகா் மொத்த பூ சந்தையில் இப்பூக்களை வாங்க மறுக்கின்றனா். அதேநேரம், ஒரு சில நாள்களில் பூக்களை கிலோ ரூ. 20-க்கு கொள்முதல் செய்கின்றனா். ஒரு கிலோ குறைந்த பட்டம் ரூ. 40-க்கு விற்றால்தான் கட்டுபடியாகும். இப்பூக்கள் விற்பனை செய்ய முடியாததால் மாற்று விவசாயம் மேற்கொள்வதற்காக செடிகளை பிடிங்கி அழித்து வருகிறோம் என்றாா்.