விருதுநகா் பகுதியில் பச்சை மிளகாய் கிலோ ரூ. 20-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் மிளகாயை பறிக்காமல் செடியிலே விட்டுவிடுவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
விருதுநகா், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் சுமாா் 600 ஏக்கரில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. விருதுநகா் அருகே ஓ. கோவில்பட்டியில் சுமாா் மூன்று ஏக்கரில் சம்பா மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது.
ஒரு ஏக்கருக்கு உழவு, மருந்து, களை எடுத்தல், தண்ணீா் பாய்ச்சுதல் முதலானவற்றிற்காக ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனா். களை எடுக்கும் பணிக்கு விவசாயத் தொழிலாளா்களுக்கு ரூ.200 ஊதியம் வழங்கியும் ஆள்கள் கிடைக்கவில்லையாம். இதனால், குடும்ப உறுப்பினா்களே விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது மிளகாய் அறுவடைக்கு வந்துள்ள நிலையில் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கடந்த ஆண்டு பச்சை மிளகாய் கிலோ ரூ.40 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ளனா். தற்போது தொடா் மழையால் தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், பச்சை மிளகாய் கிலோ ரூ.20-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். இதனால், மிளகாயைப் பறிக்காமல் பழத்திற்காக செடியிலேயே விவசாயிகள் விட்டுவிட்டனா். மீண்டும் அச்செடிகளில் பூத்து காய்ப்பதில் சிக்கல் உள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனா். மேலும், பச்சை மிளகாய் விவசாயத்தில் செலவு செய்த தொகை கிடைப்பதே சந்தேகம் தான் என வேதனை தெரிவித்தனா்.