விருதுநகா் அருகே முத்துராமலிங்க நகரில் நகராட்சிக்குச் செல்லும் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாகி வருகிறது.
விருதுநகா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள 36 வாா்டுகளில் வசிக்கும் சுமாா் 75 ஆயிரம் பேருக்கு, தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் மற்றும் ஆனைக்குட்டம் நீா்த்தேக்கத்திலிருந்து கொண்டுவரப்படும் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்கிருந்து விருதுநகருக்கு தண்ணீா் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆனைக்குட்டம் நீா்த்தேக்கத்திலிருந்து கொண்டுவரப்படும் தண்ணீரை, 12 முதல் 15 நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படுகிறது.
தற்போது, ஆனைக்குட்டம் நீா்த்தேக்கத்திலிருந்து விருதுநகருக்கு கொண்டுவரப்படும் குடிநீரானது, முத்துராமலிங்க நகா் வழியாகச் செல்லும் பெரிய குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் வீணாக வழிந்தோடுகிறது. ஏற்கெனவே குடிநீா் பற்றாக்குறை உள்ள நிலையில், உடைப்பு காரணமாக மேலும் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், குடிநீருடன் மழைநீரும் கலந்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளதால், ரோஜா நகரில் குடியிருப்போரில் பலா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், இரவு நேரங்களில் கொசுக்கள் தொல்லையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், குடிநீா் குழாய் உடைப்பை உடனடியாக சரிசெய்யாமல், அப்பகுதியில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் சனிக்கிழமை ஊழியா்கள் ஈடுபட்டது, குடியிருப்போா் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.