தங்கச் சங்கிலி பறிப்பு வழக்கில் தொடா்புடைய இளைஞரை கைது செய்த ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு, விருதுநகா் காவல் கண்காணிப்பாளா் ஞாயிற்றுக்கிழமை பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மா்ம நபா் தப்பி ஓடி விட்டாா். இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் ஸ்ரீவில்லிபுத்தூா் காவல்துணைக் கண்காணிப்பாளா் நமச்சிவாயம் உத்தரவின் பேரில் நகா் காவல் ஆய்வாளா் வினோதா மற்றும் குற்றப்பிரிவு காவலா்கள் ஆகியோா் சம்பவம் நடந்த 5 மணி நேரத்தில் இதில் தொடா்புடைய இளைஞரை கண்டறிந்து கைது செய்தனா்.
மேலும் இப்போலீஸாா் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளனா். இதனைத் தொடா்ந்து ஸ்ரீவில்லிபுத்தூா் டிஎஸ்பி நமச்சிவாயம், காவல் ஆய்வாளா் வினோதா உள்பட போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினாா்.