விருதுநகா் அருகே சூலக்கரை பகுதியை சோ்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கடத்தி சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தில் அனைத்து மகளிா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் சூலக்கரை பகுதியை சோ்ந்தவா் ஈஸ்வரன் (22). எலக்ட்ரீசியனான இவா் அப்பகுதியை சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஈஸ்வரன் சிறுமியை கடத்தி சென்றுள்ளாா்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்தப் புகாரின் பேரில் சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், ஈஸ்வரன் சிறுமியுடன் கோவை அருகே பல்லடத்தில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை மீட்டு வந்த போலீஸாா், விருதுநகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதையடுத்து ஈஸ்வரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா். சிறுமியை விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக போலீஸாா் அழைத்துச் சென்றனா்.