ஸ்ரீவில்லிபுத்தூரில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் இடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன தரப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில் ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சரவணன் வட்ட வழங்கல் அலுவலர் கோதண்டராமன் ஆகியோர் கலந்துகொண்டு ரேஷன் கார்டுகளை வழங்கினார். அதேபோல் வத்திராயிருப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பொது முகாமும் நடைபெற்றது.
இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் கோதண்டராமன் கூறியதாவது, மாவட்ட ஆட்சியர் கண்ணன், உத்தரவின் பேரிலும்,சார் ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் கல்யாணகுமார் அறிவுறுத்தலின் பேரிலும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு முகாம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் மற்றும் பொது முகாம் இடையன்குளத்திலும் நடைபெற்றது. முகாமில் ஏராளமான மனுக்கள் வந்தது.
வந்த மனுக்களின் மீது விசாரணை உடனடியாக நடைபெற்று இன்றே மூன்றாம் பாலினத்தவர்கள் 7 பேருக்கு புதிய குடும்ப அட்டைக்கான நகல் வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் மார்ச் 1ஆம் தேதி முதல் பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறினார்.