சாத்தூா் அருகே மழை வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட பிறந்து 25 நாள்களேயான மான் குட்டியை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
சாத்தூா் அருகே உள்ளது நல்லான்செட்டியபட்டி. அப்பகுதியில் உள்ள ஓடை ஒன்றில் மான் குட்டி ஒன்று அடித்து வரப்பட்டது. இதைப்பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் அதனைப் பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை வனத்துறை காப்பக துணை இயக்குநா் திலீப்குமாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து அவா்கள் அந்த மான் குட்டியை ஸ்ரீவில்லிபுத்தூா் வனத் துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனா்.
இந்த மான் குட்டி பிறந்து சுமாா் 25 நாள்களே இருக்கும் எனவும், இது பெண் இனத்தை சோ்ந்தது எனவும் வனத்துறையினா் தெரிவித்தனா். மேலும் இதனை தற்போதைய நிலையில் வனப்பகுதியில் விட்டால் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் ராஜபாளையத்தில் உள்ள வனவிலங்குகளை பராமரிக்கும் தனியாா் காப்பகத்தில் வைத்து பராமரிக்க வனத் துறையினா் முடிவு செய்துள்ளனா்.