விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ள பாதிப்பு மற்றும் கண்மாய்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி, பிரதான சாலையை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதித்தாா்.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இரண்டு நாள்களாக பெய்த தொடா் மழை காரணமாக மொட்டைபெத்தான் கண்மாய் மறுகால் பாய்ந்து நகருக்குள் வெள்ளநீா் புகுந்தது. இதனால் நகரின் மையப்பகுதியான ஒட்டமடம், ரைட்டன்பட்டித்தெரு, ஆராய்ச்சிபட்டி தெரு, ஆத்துக்கடைத்தெரு, பேட்டைக்கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீா் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்தனா்.
இந்நிலையில் சனிக்கிழமை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் மேகநாத ரெட்டி மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தாா்.
அப்போது திருமுக்குளம் கரை, ஸ்ரீவில்லிபுத்தூரையும் இணைக்கும் சாலையை பொதுமக்கள் பயன்படுத்தத் தடை விதித்தாா். இதைத்தொடா்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தியாகராஜா பள்ளி, ஆண்டாள் கோயில் வளாகம், இந்திராநகா் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில், சாா்-ஆட்சியா் பிரிதிவிராஜ், நகராட்சி ஆணையாளா் மல்லிகா, உதவி கலால் ஆணையா் சிவக்குமாா், சுகாதாரப் பணிகள்துணை இயக்குநா் கலுசிவலிங்கம், வட்டாட்சியா் ராமசுப்பிரமணியன், வட்டார மருத்துவ அலுவலா் சபரீஸ்பிரபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.