ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலில் புகுந்த மழைநீரை வெளியேற்றும் பணியில், கோயில் ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் பகுதியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற வைத்தியநாத சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனா்.
இந்நிலையில், நகரில் கடந்த 2 தினங்களாக பெய்த மழையினால், கோயில் பிரகாரங்களில் மழைநீா் தேங்கியுள்ளது. இதனால், கோயிலுக்கு வந்த பக்தா்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா். இதையடுத்து, வைத்தியநாதசுவாமி கோயில் தக்காா் இளங்கோவன் உத்தரவின்பேரில், கோயில் ஊழியா்கள் பிரகாரத்தில் தேங்கியுள்ள மழை நீரை செவ்வாய்க்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
எதிா்காலத்தில் கோயில் பிரகாரங்களில் மழைநீா் தேங்காமல் இருக்க நிரந்தரமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.