அருப்புக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு வெவ்வேறு சம்பவங்களில் பெண்களிடம் மொத்தம் 12 பவுன் நகைகளை பறித்துச்சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நாகலிங்கா நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் லதா(46). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8.30 மணிக்கு தனது வீட்டருகே நின்றுகொண்டிருந்தபோது, பின்னால் ஒரு பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் திடீரென லதாவின் கழுத்திலிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றுவிட்டனராம்.
அதேபோல அருப்புக்கோட்டை ஜோதிடம் ஷண்முகம் செட்டியார் தெருவில் அன்று இரவு சுமார் 9 மணிக்கு தனது வீட்ருகே நின்றுகொண்டிருந்த ரத்தினமணி(63) என்பவரிடமும் ஒரு பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் 9 பவுன் தங்கச் சங்கிலியைப்பறித்துக் கொண்டு தப்பிவிட்டனராம்.
ஒருமணிநேர இடைவெளியில் நடைபெற்ற இந்த இருவேறு சம்பவங்களுக்கும் தொடர்புடைய மர்ம நபர்கள் குறித்து வழக்கு பதிந்த அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.