ஸ்ரீவில்லிபுத்தூரில் அகில இந்திய விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்ட மசோதாக்களை ரத்து செய்ய வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை சாலை மறியல் செய்ததாக 44 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள, அத்தியவாசிப் பொருட்களின் திருத்தச் சட்டம். வேளாண் விளைப் பொருள்கள் வணிக ஊக்குவிப்பு மற்றும் உறுதி செய்து கொடுக்கும் சட்டம், விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவை மீதான ஒப்பந்த பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றால் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் பாதிப்புக்கு உள்ளவர்கள் என எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக இதனை ரத்து செய்ய வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு விவசாய சங்க முத்தையா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் செயலாளர் பெருமாள், மற்றும் பலவேசம் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், சிஐடியு மாநில குழு உறுப்பினர் மகாலட்சுமி, சிபிஐ ஒன்றியச் செயலாளர் வேதநாயகம்,சிபிஐ நகரச் செயலர் மூர்த்தி, சிபிஎம் மாவட்டக் குழு திருமலை, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சசிக்குமார், சிபிஎம் நகரச் செயலாளர் ஜெயக்குமார், மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 44 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், ஈடுபட்ட அனைவரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலைய காவல்துறையினர் கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.