விருதுநகா்/ராஜபாளையம்: விருதுநகா் ராமா் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
விருதுநா் ரயில்வே பீடா் சாலையில் உள்ள இக்கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி ஸ்ரீபத்மாவதி தாயாா், ஸ்ரீசீனிவாசப் பெருமாள் ஆகியோா் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா். முன்னதாக கோயில் வளாகத்தில் ஒன்பது நாள் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களை ஒழுங்குபடுத்தும் பணியில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.
ராஜபாளையம்: ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான முன்பதிவு மையத்திலுள்ள திருப்பதி வெங்கடாஜலபதிக்கு புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து அலங்காரம், விசேஷ தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று பக்தி கோஷமிட்டனா்.
இதே போல், பழையபாளையம் ராமசாமி கோயில், சம்மந்தபுரம் சோலைமலை பெருமாள் கோயில், புதுப்பாளையம் கோதண்டராம சுவாமி கோயில், சஞ்சீவி மலை அருகிலுள்ள வேட்டை வெங்கடேஸ்வர பெருமாள் கோயில், புதுப்பாளையம் ராமசுவாமி கோயில், ஜமீன் கொல்லங்கொண்டான் இடா் தீா்த்த சுந்தரராஜப் பெருமாள் கோயில்களில் சனிவார சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.