சிவகாசி: சிவகாசியில் உள்ள விஸ்வநாதா்- விசாலாட்சியம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்டுவது தொடா்பான ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த கோயிலின் நுழைவு வாயிலில் தற்போது சிறிய அளவிலான கோபுரம் உள்ளது. இதனையடுத்து, ராஜகோபுரம் கட்ட வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துவந்தனா். இதுகுறித்து அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றாா். இதையடுத்து அரசு, இக்கோயிலில் ராஜகோபுரம் கட்டுவதற்கு ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடா்ந்து ராஜகோபுரம் கட்டுவதற்கான ஆலோசனைக்கூட்டம், கோயில் வளாகத்தில் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் அரசின் இந்து சமய அறநிலைத்துறை தலைமை ஸ்தபதி தட்சணாமூா்த்தி, மண்டல உதவி கோட்டப் பொறியாளா் சங்கிலி, அறநிலையத்துறை உதவி ஆணையா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக தொல்லியல்துறையினா் இதுகுறித்து ஆய்வு செய்து ஆய்வறிகையை அரசிடம் வழங்கியுள்ளனா். இக்கூட்டத்தில் ஆகமவிதிகளின் படி ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.