திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்திலுள்ள அருள்மிகு வெள்ளியம்பலநாதர் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு கார்த்திகை மாத சிறப்பு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், பாறைக்குளம் கிராமத்தில் மேற்குத்திசை நோக்கிய சிவலிங்கம்கொண்ட குடைவரைக்கோயிலான அருள்மிகு வெள்ளியம்பல நாதர் திருக்கோயில் உள்ளது. சதுரகிரி மலைவாழ் சிவனடியார்கள் ஆண்டிற்கு ஒருமுறை மொத்தமாக இங்கு வந்து வழிபடுவது வழக்கம். இதனால் பிரதோசம், பெளர்மணி நாள்களில் இக்கோயிலில் நடைபெறும். பூஜையில் திருச்சுழி மற்றும் சுற்றுவட்ட ஊர்களைச் சேர்ந்த சிவபக்தர்கள் அதிகம்பேர் கலந்து கொள்வது சிறப்பு.
இதனிடையே, வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கார்த்திகை மாத சிறப்பு பிரதோச வழிபாட்டில் முதலில் அருள்மிகு நந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும், அலங்காரங்களும் நடைபெற்றன. பின்னர் அருள்மிகு வெள்ளியம்பலநாதருக்கு தேன், வாழைப்பழம், பேரீச்சம் பழம் ஆகியன கலந்த கலவையாலும், சந்தனம், கஸ்தூரி மஞ்சள், தேன், பால், விபூதி, குங்குமம், பன்னீர், வில்வ இலை உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றன.
பின்னர் முழு அலங்காரத்தில் அருள்மிகு நமச்சிவாயரும், அருள்மிகு நந்தீஸ்வரரும் பக்தர்களுக்குக் காட்சி தந்து அருள் பாலித்தனர். வழிபாட்டின்போது ஓம்நமச்சிவாய எனும் கோஷமிட்டபடியும், மகாமிருத்யுஞ்சய மந்திரம் சொல்லியும் பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அபிஷேகப் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயிலின் பூசாரியும் சிவனடியாருமான ராஜபாண்டி செய்திருந்தார்.