ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி மற்றும் சங்கரபாண்டியபுரம் பகுதிகளில் பொதுமுடக்கத்தை மீறி திறக்கப்படும் சாலையோரக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரோனா தொற்றை தடுப்பதற்காக சத்திரப்பட்டி மற்றும் சங்கரபாண்டியபுரம் பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மருத்துவ துணி உற்பத்தியாளா்களும், விசைத்தறி உரிமையாளா்களும் உற்பத்தி நிறுத்தத்தை அறிவித்துள்ளனா். மேலும் இப்பகுதியில் உள்ள மளிகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.
இந்நிலையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம் மற்றும் சமுசிகாபுரம் சுற்றுப்பகுதிகளில் இரவு நேர சாலையோர தள்ளு வண்டி இறைச்சிக் கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இங்கு பாதுகாப்பு நடவடிக்கை ஏதும் பின்பற்றப்படுவது இல்லை. இதுபோன்ற சாலையோர இறைச்சிக் கடைகளுக்கு தடை விதித்தால் மட்டுமே கரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற முடியும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.