விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இது தொடா்பாக கடை உரிமையாளா் உள்பட 2 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருத்தங்கல் கே.கே.நகா் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.இந்த தகவலின் பேரில் காவல் ஆய்வாா் ராஜா தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா்.சோதனையில் அப்பகுதியில் முருகன்(56) என்பவரது கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் கடையில் பதுக்கி வைத்திருந்த ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகன் மற்றும் கடை ஊழியா் ராஜேஷ்கண்ணன்(30) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.