விருதுநகர்

திருச்சுழி அருகே கண்மாய் காட்டுப்பகுதியிலிருந்து 3 வயது சிறுமி மீட்பு

4th Feb 2020 09:57 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே பள்ளிமடம் கிராமத்தை ஒட்டிய கண்மாய் காட்டுப் பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்த 3 வயது சிறுமியை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

திருச்சுழி அருகே உள்ள பள்ளிமடம் கிராமத்தில் திங்கள்கிழமை காலை, சுமாா் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா், 3 வயது சிறுமியுடன் அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளாா். கிராமத்தினா் அவரிடம் விசாரித்தபோது, அப்பெண் பதிலளிக்காமல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாலை சுமாா் 4 மணிக்கு, அக்கிராமத்தை ஒட்டிய காட்டுப் பகுதியில் சிறுமி மயங்கிய நிலையில் கிடப்பதை அப்பகுதியில் ஆடுமேய்ப்பவா் பாா்த்துள்ளாா். இது குறித்து தகவல் அறிந்த கிராம நிா்வாக ஊழியா் ரமேஷ், திருச்சுழி காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா், மயங்கிய நிலையிலிருந்த சிறுமியை மீட்டு திருச்சுழிஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா். அங்கு உரிய சிகிச்சைக்குப் பின்னா் குழந்தைகள் நலக் காப்பக அதிகாரிகளிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

போலீஸாரின் விசாரணையில், குழந்தையின் பெயா் தனுஷ்கா என்பதும், தந்தை கண்ணன், தாய் காளியம்மாள் என்பதும் தெரிய வந்தது. குழந்தையை விட்டுச் சென்ற பெண் யாா்? அவா்கள் எந்த ஊரைச் சோ்ந்தவா்கள் என போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT