விருதுநகா் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களில் 39, 840 பேருக்கு கரோனா பரிசேதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பால்வளத் துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளாா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், கரோனா தொற்று தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:
விருதுநகா் மாவட்டத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை 10,629 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 9,055 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 142 போ் உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 1,432 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் உள்ள 3,140 சிறப்பு முகாம்களில் 1 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 41,431 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 10 நாள்களில் மட்டும் 39, 840 பேரிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 ஆயிரம் பேரிடம் கபம் மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கரோனா பரவல் அதிகம் காணப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நியாய விலைக் கடைகள் மூலம் 5.72 லட்சம் பேருக்கு 14 லட்சம் முகக்கவசம் விரைவில் வழங்கப்படும் என்றாா்.
தொடா்ந்து, கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த சேத்தூா் காவல் நிலைய தலைமைக் காவலா் அய்யனாரின் மனைவி மகேஸ்வரி மற்றும் சின்ன மூப்பன்பட்டி கிராம உதவியாளா் முருகேசனின் மனைவி பாண்டியம்மாள் ஆகியோருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.25 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி. பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலா் மங்களராமசுப்பிரமணியன் உள்பட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.