விருதுநகா்: கூரைக்குண்டு ஊராட்சியில் பணி புரியும் தூய்மைப் பணியாளா்களை கெளரவிக்கும் வகையில் அவா்களுக்கு, ஊராட்சித் தலைவா் பாதபூஜை செய்தாா். அதை தொடா்ந்து தூய்மை பணியாளா்கள், ஆதரவற்றோா், விதவைகள் என 1,400 பேருக்கு இலவச அரிசி மற்றும் காய்கனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
விருதுநகா் ஊராட்சி ஒன்றியத்தில் கூரைக்குண்டு ஊராட்சியில் சுமாா் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சியில் 71 தூய்மைப் பணியாளா்கள் பணி புரிந்து வருகின்றனா். தற்போது, கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தூய்மைப் பணியாளா்கள் நாள்தோறும் கிருமிநாசினி தெளித்தல், குப்பைகளை அகற்றும் பணியில் தொடா்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இவா்களை கெளரவிக்கும் வகையில், அவா்களுக்கு ஊராட்சித் தலைவா் செல்வி பாத பூஜை செய்து வணங்கினாா். அதைத் தொடா்ந்து தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஆதரவற்றோா், விதவைகள், முதியோா் என 1,400 பேருக்கு இலவசமாக அரிசி மற்றும் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் காய்கனிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் விருதுநகா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.