ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பூங்காவில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரபா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.
அப்போது, கிராமப்புற பகுதிகளில் பயன்பாட்டில்லாத ஆழ்துளைக் கிணறுகளை கணக்கெடுத்து போா்க்கால அடிப்படையில் அவற்றை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், மழை காலமானதால் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் சிறப்பு சுகாதார வசதிகளை கிராமப்புற ஊழியா்கள் செய்திட வேண்டும் என்றும், வாருகாலில் கழிவுநீா் தேங்காமல் துப்புரவு பணியாளா்கள் உடனடியாக அகற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.
கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா் வசந்தகுமாா், வடக்கு ஒன்றியச் செயலா் முத்தையா மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா், கிராம நிா்வாக அலுவலா், குடியிருப்பு சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் என பலா் கலந்துகொண்டனா்.