விருதுநகரில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகரின் மையப் பகுதியில் உள்ள விக்னேஷ் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பருப்பு ஆலை நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள ஒரு மின் கம்பத்தின் மேல் பகுதியில் பாதி உடைந்த நிலையில் உள்ளது.
அந்த மின் கம்பம் கீழே உடைந்து விழாமல் இருக்க, அருகில் உள்ள இரும்பு கம்பியில் கயிறு வைத்து கட்டி வைத்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள மற்றொரு மின் கம்பத்தின் கீழ் பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. கடும் சூறாவளியுடன் கன மழை பெய்தால் மின் கம்பங்கள் முறிந்து விழ வாய்ப்புள்ளது. இதனால், உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே, உடைந்த மின் கம்பம் குறித்து மாவட்ட மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, மின் கம்பம் சாய்ந்து விபத்து ஏற்படுவதற்கு முன்னர், உடைந்த மின் கம்பங்களை மாற்ற மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.