விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு காளைகளை அடக்க முயன்ற மாடுபிடிவீரர்கள் 4 பேர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
திருச்சுழி அருகே உள்ள அம்மன்பட்டி கிராமத்தில் உள்ள பாலகணபதி, பாலமுருகன் மற்றும் ஸ்ரீ காளியம்மன் ஆகிய கோயில்கள் சார்பாக சித்திரைத் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விளையாட்டில் ஒரு நீளமான கயிற்றில் கட்டப்பட்ட காளையை 9 பேர் சேர்ந்து அடக்க வேண்டும் என்பது நடைமுறை. இதன்படி காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணி வரை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இப்போட்டியில் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், மதுரைஆகிய மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 20-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இதில் அனுமதி பெற்ற 200-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு சில்வர் அண்டா, மெத்தை, கட்டில், ரொக்கம் ரூ. 5,000 உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் காளைகள் தாக்கியதில் கீழத்தூவலைச் சேர்ந்த சேதுபதி (20), முகேஷ் கண்ணன் (20), மணிகண்டன் (20), மற்றும் நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்த கார்த்திக் (25) ஆகிய 4 மாடு பிடி வீரர்கள் காயமடைந்தனர். மேலும் மாட்டின் உரிமையாளர் மருது (27) என்பவரும் காயமடைந்தார். காயமடைந்த 5 பேரும் முதலுதவிச் சிகிச்சைக்குப் பின்னர் உடனடியாக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விழாவில் விதிமீறல்கள் உள்ளதா என்பது குறித்து வருவாய்த்துறையினர் கண்காணித்தனர். திருச்சுழி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். சுகாதாரத்துறை சார்பில் உரிய மருத்துவ உபகரணங்களுடன் சிறப்பு மருத்துவச்சிகிச்சைப்பிரிவு வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.