சாத்தூர் அருகே தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ளது படந்தால் கிராமம். இக்கிராமம் சாத்தூர்-தாயில்பட்டி சாலையில் அமைந்துள்ளது. இங்கு தென்றல்நகர், வசந்தம்நகர், அய்யனார் காலனி, மருதுபாண்டியர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் கழிவுகளையும், குப்பைகளையும் கொட்டுவதற்கென ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைத்தொட்டி அமைத்து தரவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் குப்பைகள் மாதக்கணக்கில் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.