விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி கோயிலில் ஆனி தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 8 நாள்களும் ஒவ்வொரு மண்டகப்படி தாரர்கள் சார்பில் பூச்சப்பரம், சிம்ம வாகனம், கற்பக வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன், சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆனி பெருந் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நகரை சுற்றியுள்ள சத்திரப்பட்டி, சேத்தூர், தளவாய்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை சுமார் 9.30 மணி அளவில் கோயில் வளாகத்தில் உள்ள நிலையில் இருந்து புறப்பட்ட சுவாமி மற்றும் அம்மன் தேர்களை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் வடம் பிடித்து இழுத்தனர்.
பஞ்ச வாத்தியங்கள் முழங்கியவாறு, சிவ கோஷத்துடன் வடம் பிடித்து இழுக்கப்பட்ட தேர்கள் கோயிலை சுற்றி உள்ள நான்கு ரத வீதிகளையும் வலம் வந்து நிலைக்கு திரும்பின. இதையொட்டி 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், ஊர்காவல் படையினர், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.