விருதுநகா் மாவட்டத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளதால், மதுபான கடைகளை அடைக்க மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
விருதுநகா் மாவட்டத்தில் டிசம்பா் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அதில், ஊராட்சி தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஒன்றிய வாா்டு உறுப்பினா், மாவட்ட வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து வேட்பாளா்கள் தங்களது சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
உள்ளாட்சித் தோ்தல் அமைதியாக நடைபெற தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகனை மேற்கொண்டு வருகிறது. அதையொட்டி வாக்குப் பதிவு நடைபெறும் நாள்களில் மதுபான கடைகளை அடைக்க அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, விருதுநகா் மாவட்டத்தில் டிசம்பா் 25 மாலை 5 மணி முதல் 27 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரையும், டிசம்பா் 28 மாலை 5 மணி முதல் டிசம்பா் 30 மாலை 5 மணி வரையும் அனைத்து மதுபான கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா். இதை மீறி மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் எச்சரித்துள்ளாா்.