விருதுநகர்

வாடியூரில் குடிநீர் வழங்கக் கோரி இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

27th Aug 2019 07:30 AM

ADVERTISEMENT

விருதுநகர் அருகே வாடியூர் கிராமத்தில் ஓராண்டிற்கும் மேலாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அக்கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் வாடியூர் ஊராட்சி உள்ளது. 
 இந்த ஊராட்சியில் 15 கிராமங்கள் உள்ளன. இதனால், அனைத்து கிராமங்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்து தருவதில் மிகவும் கால தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஊராட்சியை இரண்டாக பிரிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டதாம். ஆனால், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்த நிலையில், வாடியூரில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக குடிநீர் வழங்குவதில்லை என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அக்கிராம மக்கள் ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் அர்ச்சுனா நதியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்குவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால், குடிநீர் வழங்குவதற்தான ஆரம்ப கட்ட பணிகள் கூட இதுவரை நடைபெற வில்லை. எனவே, அர்ச்சுனா நதியில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். மேலும் அப்பகுதியில் ஏற்கெனவே உள்ள ஆழ்துளை கிணறை சுத்தம் செய்ய வேண்டும். வாடியூர் கிராமத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள அடி குழாய்களை சீரமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சந்தோஷம், கல்யாண சுந்தரம் தலைமை வகித்தனர். சிபிஐ மாநில குழு உறுப்பினர்கள் பாலமுருகன், செந்தில்குமார் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT