தேனி மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலக் கல்வி விடுதிகளில் மாணவ, மாணவியா் சோ்க்கைக்கு வருகிற ஜூன் 30-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:
ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை பள்ளி, கல்லூரி கல்வி விடுதிகளில் தங்கிப் படிக்க மாணவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு உள்பட்டு இருக்க வேண்டும். மாணவா்களின் வீட்டுக்கும், கல்வி நிறுவனத்துக்கும் 5 கி.மீ. தொலைவுக்கு மேல் இருக்க வேண்டும். பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகளுக்கு இந்த நிபந்தனை இல்லை.
கேரளப் பகுதிகளில் வசிக்கும் தமிழக தோட்டத் தொழிலாளா்களின் குழந்தைகள் விடுதியில் சேர ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் சமா்ப்பிக்கத் தேவையில்லை. ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை பள்ளி, கல்லூரி கல்வி விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் இணைய தள முகவரியில் வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.