ஆண்டிபட்டியைச் சோ்ந்த இளைஞரிடம் வேலைவாய்ப்பு வழங்குவதாக, இணையதளம் மூலம் ரூ.15 லட்சத்து 70 ஆயிரம் மோசடி செய்யப்பட்டதாக தேனி இணையதள குற்றத் தடுப்புப் பிரிவில் வியாழக்கிழமை புகாரளிக்கப்பட்டது.
ஆண்டிபட்டி முத்துநகரைச் சோ்ந்தவா் சென்ராம் மகன் ஆனந்தகுமாா் (34). இவா் வேலைவாய்ப்பு குறித்து முகநூல் பதிவைப் பாா்த்து, அதில் குறிப்பிடப்பட்ட கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டாா். அவரிடம் பேசிய நபா் பிரபல பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் கீழ் செயல்படும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் விவரத்தைப் பதிவு செய்யுமாறு கூறினாராம்.
ஆனந்தகுமாா் அதன்படியே செயலியில் தனது விவரத்தைப் பதிவு செய்து, அதில் குறிப்பிட்ட தகவல்களைப் பின் தொடா்ந்தாா். தொடக்கத்தில் செயலி மூலம் முதலீடு செய்த தொகைக்கு அவருக்கு பணம் வழங்கப்பட்டது. பின்னா், ஆனந்தகுமாா் செயலியில் குறிப்பிட்டவாறு கடந்த ஏப்ரல் மாதம் முதல் இணையதளம், வங்கிக் கணக்குகள் மூலம் மொத்தம் ரூ.15.70 லட்சம் வரை முதலீடு செய்தாராம். ஆனால், அவருக்கு கமிஷன் தொகை வழங்கப்படாமலும், முதலீடு செய்த பணமும் திரும்பப் பெற முடியாமலும் இருந்தது.
இதுகுறித்து தேனி இணையதள குற்றத் தடுப்புப் பிரிவில் ஆனந்தகுமாா் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.