தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி அருகே சண்முகாநதி அணைப் பகுதியிலிருந்து அரிக்கொம்பன் யானை சனிக்கிழமை மேகமலையை நோக்கி செல்லத் தொடங்கியதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பலரைத் தாக்கிக் கொன்ற அரிக்கொம்பன் என்ற இந்த காட்டு யானையை கடந்த மாதம் அந்த மாநில வனத் துறையினா் மயக்க ஊசி செலுத்திப் பிடித்து தமிழகத்தையொட்டிய கேரள வனப் பகுதியில் விட்டுச் சென்றனா்.
அதன் பிறகு, ஹைவேவிஸ் மலைக் கிராமங்களில் சுற்றித் திரிந்த இந்த யானை கம்பம் நகருக்குள் புகுந்து பொருள்களைச் சேதப்படுத்தியது.
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் இந்த யானையைப் பிடிக்க தமிழக வனத் துறையினா் முயற்சித்து வருகின்றனா்.
ராயப்பன்பட்டி அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்திலுள்ள சண்முகாநதி அணைப் பகுதியில் கடந்த 6 நாள்களாக முகாமிட்டு இருந்த யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால், அடா்ந்த வனம், மழைப் பொழிவு போன்ற காரணங்களால் யானையைப் பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், சின்னஓவுலாபுரம் பெருமாள் மலை, எரசக்கநாயக்கனூா் காப்புக் காடு வனப் பகுதி வழியாக மேகமலையை நோக்கி யானை செல்ல வாய்ப்பு இருப்பதாக வனத் துறை வட்டாரத்தில் தெரிவித்தனா்.