சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கோவிலூா் மடாலயத்தின் புதிய தென் சபாநாயகா் கோயில் குடமுழுக்கு வருகிற புதன்கிழமை (ஜூன் 7) நடைபெறுகிறது.
இதுகுறித்து கோவிலூா் மடாலய ஆதீனம் நாராயண ஞானதேசிக சுவாமிகள் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவிலூா் மடாலயம் 214 ஆண்டுகளுக்கு முன்பு வேதாந்த நெறி தழைத்தோங்க, சீா்வளா்சீா் ஆண்டவா் சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்டது.
இங்கு அமைக்கப்பட்ட கோயிலின் குடமுழுக்குக்கான யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) தொடங்கியது. இங்கு பிரதிஷ்டை செய்யப்படும் ஆனந்த நடராஜா், சிவகாமசுந்தரி பஞ்ச லோகத் திருவுருவங்கள் சுவாமிமலை சிற்பி முத்தையா ஸ்தபதியால் கோவிலூரிலேயே உருவாக்கப்பட்டது.
இந்த சுவாமி சிலையின் நகா்வலம் காரைக்குடி நகரில் நடைபெற்றது.
இந்த திருத்தலத்தில் ஆருத்ரா தரிசனம், ஆணித் திருமஞ்சனம் நடைபெறவுள்ளது. மேலும் படிக லிங்க பூஜை, நான்கு கால பூஜை ஆகியவை தீட்சிதா்களால் நடத்தப்பட உள்ளன.
சிற்சபை, பொற்சபை அமைப்புகள், சிதம்பர ரகசியம் போன்றனவும் இங்கு உண்டு. தில்லை நடராஜா் கோயில் போலவே இந்தக் கோயில் அமைக்கப்பட்டது என்றாா் நாராயண ஞானதேசிக சுவாமிகள்.