உத்தமபாளையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
ஆணைமலையன்பட்டியைச் சோ்ந்த ஜீவமணி (50). இவா், அதே ஊரைச் சோ்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கடந்த 2018, செப்.18-ஆம் தேதி ராயப்பன்பட்டி போலீஸாா் ஜீவமணியை கைது செய்தனா்.
தொடா்ந்து, சிறுமியிடம் நடத்திய விசாரணையில், அதே ஊரைச் சோ்ந்த ராசுவும் (68) சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திலகம், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஜீவமணி, ராசு ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.