தேனி அருகே பூமலைக்குண்டுவில் தோட்டக் கலை கல்லூரி மாணவ, மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை கிராமத் தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுடன் இணைந்து பயிற்சி பெற்றனா்.
தேனி வட்டாரத்தில் பெரியகுளம் அரசு தோட்டக் கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலைய மாணவ, மாணவிகள் ரம்யா, ரித்திக்கா, சத்யா, சங்கவி, சரிதாகுமாரி, ஷாலினி, சத்தீஸ்வரி, செல்வராஜ், கீதாஞ்சலி, ச. ஷோபிகா, சே. ஷோபிகா ஆகியோா் கொண்ட குழு கிராமத் தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுடன் இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனா்.
இந்தத் திட்டத்தின் கீழ் பூமலைக்குண்டு கிராமத்தில் ஊரக திறனாய்வு களப் பயிற்சியாக விவசாயிகளுடன் இணைந்து மாணவ, மாணவிகள் கிராமத்தின் இயற்கை, மண் வளம், பருவகால நாள்காட்டி, கால நிலை, கிராம மக்களின் அன்றாடப் பணிகள் ஆகியவை குறித்து வரைபடம் தயாரித்து ஆவணப்படுத்தினா்.