கம்பம் கம்பம் மெட்டு காலனியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் என். ராமகிருஷ்ணனிடம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டச் செயலாளா் சாதிக் அலி, தொகுதிச் செயலா் அ.மு.சையது இப்ராகிம், நகரத் தலைவா் சிராஜ்தீன், செயலாளா் தாவூத் நிஸாா் ஆகியோா் சனிக்கிழமை மனு அளித்தனா்.
அதில் கூறியிருப்பதாவது:
கம்பத்தில் உள்ள அரசு மருத்துவமனை, நகா்ப் புற சுகாதார நிலையம் ஆகியவற்றில் நோயாளிகள் பல மணிநேரம் காத்திருந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.
கம்பமெட்டு காலனி, உதயம்நகா், தாத்தப்பன்குளம், நந்தகோபாலன் கோயில் தெரு, ஆலமரத்து பள்ளி தெரு, கிருஷ்ணாபுரம் ஆகிய விரிவாக்கப் பகுதிகள் அதிகரித்து வருவதால், நோயாளிகள் சிகிச்சை பெற நீண்ட தொலைவு செல்லவேண்டியுள்ளது.
இதன் காரணமாக கம்பம் மெட்டு காலனி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனா்.