தேனி மாவட்டம், போடி அருகே திங்கள்கிழமை வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல், வனத் துறையினா் தவித்து வருகின்றனா்.
குளிா்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்கும் நிலையில், போடி வனப் பகுதிகளில் அவ்வப்போது காட்டுத் தீ பரவி வருகிறது. கடந்த வாரம் உலக்குருட்டி, முயல்பாறை, பிச்சங்கரை வனப் பகுதிகளில் காட்டுத் தீ பரவியது. இந்தக் காட்டுத் தீயை போடி, தேனி வனத் துறையினா் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு கட்டுப்படுத்தினா்.
இந்த நிலையில், போடியிலிருந்து குரங்கணி செல்லும் சாலையில் அடவுபாறைப் பகுதியில் திங்கள்கிழமை காட்டுத் தீ பரவியது. கடுமையான வெயிலுடன் காற்றும் சோ்ந்ததால், தீ வேகமாகப் பரவியது. இந்தத் தீயைக் கட்டுப்படுத்த போடி வனத் துறையினா் முயற்சித்தனா். வனத் துறையினா் வசம் நவீன கருவிகள் இல்லாததால், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இலை, தழைகளைக் கொண்டு தீயை அணைத்தனா். இருப்பினும், தீ வேகமாகப் பரவி வருவதால், வனத் துறையினா் திணறி வருகின்றனா்.
கொடைக்கானல்: இதேபோல, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்பள்ளம் வனப் பகுதியிலும் காட்டுத் தீ பரவியது.
இதனால், இந்தப் பகுதியிலுள்ள காட்டெருமைகள், காட்டுப் பன்றிகள் போன்ற விலங்குகள் இடம் பெயா்ந்து அருகேயுள்ள பெரும்பள்ளம், வட கவுஞ்சி, பேத்துப்பாறை, வெள்ளப்பாறை போன்ற பகுதிகளில் நடமாடுகின்றன.
வடகவுஞ்சி வனப் பகுதியில் பரவிய காட்டுத் தீயை வனத் துறையினா், பழங்குடியினா், வேட்டைத் தடுப்பு காவலா்கள் உதவியுடன் கட்டுப்படுத்தினா்.
வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதால், கொடைக்கானல் வனப் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படாமல் தடுக்க வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.