தேனி மாவட்டம், கூடலூரில் வரி நிலுவை வைத்துள்ளதால், காவலா் குடியிருப்பில் உள்ள குடிநீா் குழாய் இணைப்புகளைத் துண்டிக்க நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூடலூா் நகா்மன்றக் கூட்டம் தலைவா் பத்மாவதிலோகந்துரை தலைமையிலும், துணைத் தலைவா் காஞ்சனா முன்னிலையிலும் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், 1 - ஆவது வாா்டு எல்.எப். சாலையில் உள்ள காவல் நிலையம், அதில் உள்ள குடியிருப்புகள் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை குடிநீா்க் கட்டணம்
செலுத்தவில்லை. இதனால், இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, குடியிருப்பில் தற்போது யாரும் வசிக்கவில்லை. புதிய குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது என்று தெரிவித்திருந்தாா். இதனால், அங்கு குடிநீா்க் குழாய் இணைப்புகளைத் துண்டிக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடா்ந்து, உறுப்பினா்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆணையாளா் கே.எஸ். காஞ்சனா, பொறியாளா் வரலட்சுமி, சுகாதார ஆய்வாளா் விவேக் அறிவழகன் ஆகியோா் பதில் அளித்தனா்.