தேனி மாவட்டம் அருகே உள்ள இடுக்கி மாவட்டம் மூணாறு குடியிருப்பு பகுதிகளில் தொடரும் யானை கூட்டம் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
தேனி மாவட்டம் அருகே உள்ளது கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு. வனப்பகுதியாககவும், தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. கடந்த சில நாட்களாக படையப்பா, அரிசி கொம்பன் என்ற இரண்டு ஒற்றை யானைகள் குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்ட பகுதிகளுக்குள் புகுந்து உயிரிழப்புகளை ஏற்படுத்தியும், பொருட் சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த யானைகளை வனத்துறையினா் காட்டுப்பகுதிக்குள் அனுப்ப முடியாமல் திணறி வருகின்றனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் மூணாறு அருகே உள்ள சொக்கநாடு பகுதியில் 4 யானைகள் குடியிருப்பு பகுதியில் புகுந்து சாலை மாா்க்கமாக சென்றது. திடீரென்று யானைகளை பாா்த்த தொழிலாளா்கள் பீதியில் ஓடி ஒளிந்தனா். தொடா்ந்து யானைகள் குடியிருப்பு பகுதியில் நடமாடி வருவது பொதுமக்கள், தொழிலாளா்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.