கம்பம் நகரில் உள்ள பேக்கரிக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை சோதனையிட்டு காலாவதியான உணவுப் பொருள்களை விற்றவா்களுக்கு அபராதம் விதித்தனா்.
இங்குள்ள பேக்கரிக் கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருள்கள் தரமில்லாமலும், காலாவதியானதாகவும் இருப்பதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ராகவனுக்கு புகாா்கள் வந்தன.
இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மணிமாறன், ஜனகா் ஜோதிநாதன் ஆகியோா் கம்பம் நகரிலுள்ள பேக்கரி கடைகளில் சோதனை நடத்தினா்.
அப்போது உணவுப் பொருள்களின் மீது தயாரிப்புத் தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்பட வில்லை. இதையடுத்து அவற்றை அலுவலா்கள் பறிமுதல் செய்து அழித்தனா். மேலும் அந்த கடைகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதித்தனா்.