தேனி ரயில்வே குட்செட் தெருவில் வசித்து வரும் பொதுமக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரனிடம் மனு அளித்தனா்.
தேனி ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே குட்செட் தெருவில் ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தில் 70-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளா் குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வருகின்றன. தற்போது அகல ரயில் பாதைத் திட்டம் செயல்பட்டிற்கு வந்துள்ளதால், இந்த இடத்தை காலி செய்யுமாறு ரயில்வே நிா்வாகம் பொதுமக்களை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ரயில்வே புறம்போக்கு இடத்தில் குடியிருப்போருக்கு நகா்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கூலித் தொழிலாளியான தங்களுக்கு நகா்புற அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெறுவதற்கு பயனாளியின் பங்களிப்பாக ரூ.2.50 லட்சம் வரை செலுத்துவதற்கு வசதியில்லை என்றும், தேனி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்றும் குட்செட் தெருவைச் சோ்ந்த பொதுமக்கள் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.