தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன் வழங்க பரிந்துரைக்கவும், வங்கிக் கடன் வழங்கவும் அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதாக புகாா் தெரிவித்து திங்கள்கிழமை, தேனியில் மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரனிடம் மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில் கம்பம் வட்டார முல்லை மாற்றுத் திறனாளிகள் நலச்சங்க நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிக் கடன் வழங்க பரிந்துரைக்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரும், பரிந்துரைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன் வழங்க வங்கி அதிகாரிகளும் தயக்கம் காட்டி வருகின்றனா். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் குடிநீா் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
அரசு சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் வேலை வாய்ப்பு வழங்குவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனா்.