எல்லையில் போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க தமிழக, கேரள மாநிலங்களின் போலீஸாா், வனத்துறையினா் இணைந்து குமுளியில் ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டத்தை வியாழக்கிழமை நடத்தினா்.
பெரியாறு புலிகள் காப்பகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ், இடுக்கி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் குரியா கோஸ் ஆகியோா் தலைமை வகித்தனா்.
தேனி மாவட்டத்திலிருந்து போதைப் பொருள்களை கடத்தி வந்து கேரளத்தில் கைது செய்யப்படுபவா்களை தமிழக போலீஸாரிடம் ஒப்படைப்பது, தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு தொழிலாளா்களை ஏற்றி வரும் வாகனங்கள், காய்கனி, ஜல்லி, மணல் ஏற்றி வரும் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் எல்லையில் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் உத்தமபாளையம் ஏஎஸ்பி ஸ்ரேயா குப்தா, தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ், இடுக்கி தனிப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் பியூஸ் ஜாா்ஜ், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் மேத்யூ ஜாா்ஜ் மற்றும் வனத்துறையினா் கலந்து கொண்டனா்.